Saturday, April 27, 2019

02. தயாரிப்பாளரின் ஆத்திரம் சங்கத்தின் அங்கீகாரம்


தலைவர் கே.ஆர்.ஜி.- திரு.முக்தா சீனிவாசன் 
அந்தக் காலகட்டத்தில் திரைப்படங்கள் அவுட் ரைட், அல்லது எம்.ஜி. முறையில் திரையிடப்பட்டன. அதற்கு எந்தப் பிரச்சினையும் பெரிதாக இருந்ததில்லை. ஆனால், டிஸ்ட்ரிப்யூஷன் எனப்படும் விநியோக முறையில் திரையிடப்பட்ட படங்களுக்குப் பெரும் பிரச்சினைகள் இருந்தன.

தயாரிப்பாளரின் முந்தைய படம் பற்றிய வரவு செலவு கணக்குகளை உடனுக்கு உடனே தீர்த்துக் கொள்ளாமல் இருக்கும் தயாரிப்பாளர்கள், அடுத்த படத்தின் வெளியீட்டின் போது வினியோகஸ்தரின் பழைய பாக்கித் தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

பாக்கித் தொகையை படம் தொடங்கும் போது சொல்லமாட்டார்கள். படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகும் போதுதான் தெரிவிப்பார்கள். அதனால், ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்திற்கும் கடைசி நேரத்தில் நேரில் சென்று பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலை தயாரிப்பாளர்களுக்கு அப்போது இருந்தது. இல்லை என்றால், அந்தப் படத்திற்கு ’ரெட்’ என்கிற தடை நடைமுறையில் இருந்தது.

படம் பெற தியேட்டர் அதிபர்களும், படம் வெளியிட தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களை நம்பியே இருந்தனர். அதனால், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கங்கள் ஒவ்வொரு சினிமா மாவட்டத்திலும் வலிமையாக இருந்தன.

தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைத்திடப் படத்தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத்திற்கு வர வேண்டும். அதற்குத் தயாரிப்பாளர் சங்கம் துணை நிற்கும் என்று அறிவித்தார் தலைவர் கே.ஆர்.ஜி.

அதே போல, ஒவ்வொரு மாவட்ட விநியோகஸ்தர் சங்கங்கத்துக்கும் கடிதம் எழுதி, தமிழ்ப் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மூலமாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

உண்மையாகச் சொல்வதென்றால் பணம் போட்டுப் படம் தயாரிக்கும் படத் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூப்பிட்டு அவர்களை நிற்க வைக்காதீர்கள் என்கிற மாதிரியான வேண்டுகோள், அது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலிமை பெறுவதற்கு முன் அப்படிப்பட்ட நிலை தயாரிப்பாளர்களுக்கு இருந்தது என்பதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

வேறு ஒருவருக்கு படத்தை விற்றதால், முன்பு படம் வாங்கிய விநியோகஸ்தர்,  மதியம் இரண்டு மணிக்கு ஒரு தயாரிப்பாளரை அவரது அலுவலகத்தில் துணைக்கு வந்த ஆட்களை வைத்துக் கொண்டு அடித்திருக்கிறார். அவர் சங்கத்திற்கு அழுது கொண்டு போன் செய்ததும், உடனடியாக நான் தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல, அவர் அதிரடியாக இறங்கி நடவடிக்கை எடுத்தார். அதே போல நிதி உதவி செய்தவர்கள் மிரட்டல், அடி, உதைகள் என பல துன்பங்களைச் சில தயாரிப்பாளர்கள் அனுபவித்திருக்கிறார்கள்.

நடிக்க முன் பணம் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காத சில நடிகர், நடிகைகளால் தயாரிப்பாளர்கள் கஷ்டத்திற்கு ஆளானார்கள். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவியாக அவர்களுக்கு பாதுகாப்புக் கேடயமாகத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கருதினார் கே.ஆர்.ஜி.

பல வெற்றிப் படங்களைத் தயாரித்த ஒரு தயாரிப்பாளர் இறந்த போது, அவரது இறுதி காரியத்திற்குச் செலவுக்குப் பணம் இல்லாமல் இருந்ததை நேரில் கண்டு வேதனைப்பட்டிருக்கிறார். அதனால், தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் இருக்க வேண்டும் எனவும் முடிவு செய்திருந்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் நூற்றி எழுபது உறுப்பினர்கள் மட்டுமே அப்போது இருந்தனர். அதில் சில உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் கூட இருந்தனர். அதனால், உறுப்பினர் ஆகாமல் வெளியே தமிழ்ப் படம் எடுக்கும் அனைத்து தயாரிப்பாளர்களையும் சங்கத்தில் சேர்க்க வேண்டும் என்று என்னை தினமும் விரட்டினார்.

ஆயிரம் ரூபாய் நன்கொடை, இரு நூறு ரூபாய் ஆண்டு சந்தா, நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம் என ஆயிரத்து முன்னூறு ரூபாயில் உறுப்பினர் சேர்க்கை இருந்தது. விண்ணப்பப் படிவங்களைக் கையில் வைத்துக் கொண்டு, படத் தொடக்க விழா, பாடல் வெளியீட்டு விழா, பட அலுவலகங்கள் என்று நேரம் காலம் பார்க்காமல் தயாரிப்பாளர்களைத் தேடி ஓடினேன்.

பொன்மானச் செம்மலுக்கு மாலை அணிவிக்கும் கே.ஆர்.ஜி. 
சிலர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கொண்டானர். சிலர் விவாதித்தனர். சிலர் கிண்டல் செய்தனர். சிலர் ஏளனம் செய்தனர். சிலர் ஆயிரத்து முன்னூறு ரூபாய்க்காகப் பல முறை அலையவிட்டனர். முயற்சிகள் வெற்றி பெறும் என்கிற ஒரே இலக்கோடு ஓடு ஓடு என்று என்னை விரட்டினார் திரு. கே.ஆர்.ஜி.

ஒரு நாள் மதியமே திரும்பி வந்துவிட்டேன்.  ‘’என்ன பாலா... இன்னைக்கு எத்தனைப் பேரைப் பார்த்தே?... ‘’ என்று ஆர்வத்துடன் கேட்டார்,

நான் ஒரு தயாரிப்பாளரிடம் போய் டோஸ் வாங்கி வந்த தகவலைச் சொன்னதும், அதிர்ந்து போனார்.

தயாரிப்பாளர் சங்கம் ஒரு லெட்டர் பேடு சங்கம். அங்கு உறுப்பினராகி என்ன பயன்? படத்திற்குப் பெயர் வைத்து பதிவு செய்து சென்சார் கிளியரன்ஸ் பெறுவது என்றால் கூட, பிலிம் சேம்பருக்கோ, கில்டு அமைப்புக்கோதான் செல்ல வேண்டும். அதனால் அவர்களைப் பகைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் ஏன் உறுப்பினராக வேண்டும் என்பதைக் கடுமையான வார்த்தைகளால் அந்தத் தயாரிப்பாளர் அர்ச்சனை செய்திருந்தார். அதை அப்படியே சொன்னேன்.

அந்தத் தயாரிப்பாளர் கேட்பதில் நியாயம் இருப்பதை உணர்ந்த தலைவர் கே.ஆர்.ஜி. அவர்கள், உடனடியாகச் செயற்குழுக் கூட்டத்தை கூட்டி, அதற்கு தீர்வுகாண முயன்றார்.

மூத்த உறுப்பினர் திரு.முக்தா சீனிவாசன் அவர்களைச் சங்க செலவில் டில்லிக்கு அனுப்பி வைத்து, மத்திய தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில் பேச வைத்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக வரும் பதிவு செய்த படப் பெயர் கடிதம், மற்றும் பப்ளிசிட்டி கிளியரன்ஸ் சான்றிதழ் பெற்றுக் கொண்டு படங்களைத் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும்படி மத்திய தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட க் காரணமாக இருந்தார்.

இந்த உரிமைக்கான முயற்சியும், வெற்றியும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெரிய அங்கீகாரமாக இருந்தது. இதை எதிர்பாராத மற்ற அமைப்புகள் ஆடித்தான் போயின.


No comments:

Post a Comment