Saturday, April 27, 2019

18. நட்சத்திர கிரிக்கெட் போட்டியும், கார்க்கில் நிவாரண நிதியும்


மேயராக மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகராட்சிக்கு முதன் முறையாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின். அவரை, தமிழ்த் திரையுலகம் சார்பில் தலைவர் கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர்கள் கே.ஆர்., ஆர்.பி.சௌத்ரி, கே.முரளிதரன், ஏ.எல்.அழகப்பன் உட்பட பலர் ரிப்பன் மாளிகைக்கு நேரில் சென்று வாழ்த்தினார்கள்.

திரு.அபிராமி ராமநாதன் ரோட்டரி கிளப் தலைவராக இருந்த போது, போலியோ சொட்டு மருந்து, மற்றும் மாநராட்சி பள்ளிகளுக்கு கணினி வழங்க உதவும் வகையில் நிதி திரட்ட ஒரு நட்சத்திர கிரிகெட் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று விரும்பினார்.

எனது குருநாதர் டைமண்ட் பாபு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் கே.விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு அந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

அப்போது கார்க்கில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அதனால், ராணுவத்தினருக்கு உதவும் வகையில் மதுரையில் ஒரு நட்சத்திர கலை நிகழ்ச்சியும், சென்னையில் நட்சத்திரங்களும், கிரிக்கெட்  வீரர்களும் கலந்துகொண்டு விளையாடும் கிரிக்கெட் போட்டியும் நடத்தி, தமிழ்த் திரையுலகம் சார்பில் பெரிய நிதி ஒன்றை வழங்குவது என்று முடிவானது.

அபிராமி ராமநாதன்
நடிகர் சரத்குமார், அரவிந்தசாமி, நெப்போலியன், நடிகை ராதிகா உட்பட முக்கிய கலைஞர்கள் சிலர் முன்னின்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு எனது குருநாதர் டைமண்ட் பாபு தலைமையில் கண்ணதாசன், நெல்லை சுந்தர்ராஜன், சிங்காரவேலு, மௌனம் ரவி, ரியாஸ் அகமது, விஜயமுரளி, பெரு.துளசி பழனிவேல், சங்கர் கணேஷ், வெட்டுவானம் சிவக்குமார், கணேஷ்குமார், மதுரைசெல்வம், ராமதாஸ், கோவிந்தராஜ், நான் உட்பட பலர் விழா அமைப்பாளர்களாக இருந்து வேலை செய்தோம்.

நட்சத்திரங்களை ரயிலில் மதுரைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக தங்க வைத்து, நிகழ்ச்சியில் பங்குபெற வைத்து, திரும்ப ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து அனுப்பி வைக்கும் வரை, உணவு, தங்கும் இடம், ரயில், பஸ் உதவி என அனைத்து வேலைகளையும் கவனி த்துக் கொண்டோம்.

அதே போல சென்னையில் நடந்த விழாவிலும் எங்களுடைய வேலை சிறப்பாக இருந்தது என பாராட்டினார் நடிகை ராதிகா.

இந்த இரு நிகழ்ச்சிகளை சரத்குமார், ராதிகா இருவரும் முன்னின்று நடத்த பெரிதும் உதவியாக இருந்தார்கள். இந்த விழாவுக்குப் பிறகு இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தனர்.



No comments:

Post a Comment