Saturday, April 27, 2019

21. என் மீது ஆத்திரப்பட்ட கே.ஆர்.ஜி.யின் மனைவி

மனைவி சாந்தாவுக்கு கடிகராம் அணிவிக்கும் கே.ஆர்.ஜி. அருகில் நடிகை சரிதா

என்னைப் பொறுத்தவரை நான் தயாரிப்பாளர் சங்கத்தையும், என்னையும் தனிதனியே பிரித்துப் பார்த்ததில்லை. வயிற்று பிழைப்புக்கான வேலை என்றாலும், அந்த வேலையை விரும்பி ஈடுபாட்டோடு செய்தேன். அதில் நிறைவு இருந்தது. இல்லை என்றால் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்திருக்க முடியாது.

என்னுடைய நேர்மையான உழைப்பு சங்கத்திற்கு இருந்தது. தலைவருக்கும் சங்கத்திற்கும் உண்மையாக இருந்தேன். தலைமைக்கு விசுவாசமாக வேலை செய்தேன். உறுப்பினர்கள் அனைவருக்கும் அது தெரியும்.

கே.ஆர்.ஜியிடம் பேசுவது என்றால் கூட, அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? அல்லது, கோபமாக இருக்கிறாரா? என்று என்னிடம் கேட்டு விசாரித்துத் தெரிந்து கொண்டு பல தயாரிப்பாளர்கள் அவரிடம் பேசுவார்கள்.

நான் வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே இவனுக்கு பொய் சொல்லத் தெரியாது. ஏமாற்றத் தெரியாது என்பதை என்னைப்பற்றி தெரிந்து கொண்டார் தலைவர் கே.ஆர்.ஜி..

அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை மரியாதைக்குரியது.

என்னை “கவுன்சிலின் பில்லர்’ என்றுதான் சில சமயம் அழைப்பார்.

தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஒரு நாள் வேலைக்கார பையன் என்னிடம் கூறினான்.

“அம்மா உங்கள் மீது கோபமாக இருக்கிறார்? என்று.

“எதற்கு?’’ என்று கேட்டேன்.

பாலன் எழுதிய சரசு புத்தகத்தை வெளியிடும் கே. ஆர். ஜி. 
“அய்யா... சாப்பிடும் போது கூட... பாலா சாம்பார் ஊத்து என்று ....  உங்கள் பெயரைத்தான் சொல்கிறார். அம்மா பெயரை மறந்து விடுகிறார்....’ என்று தெரிவித்தான்.

கே.ஆர்.ஜி. அவர்களின் துணைவியார் பெயர் சாந்தா. அவரை சாந்தா என்று அழைப்பதற்கு பதிலாக, பாலா என்று அழைத்தால்.... அவர் கோபப்படாமல் எப்படி இருக்க முடியும்?.

அந்த அளவிற்கு தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களின் கூப்பிட்ட குரலுக்கு வேலை செய்பவனாக நான் இருந்தேன். என் பெயரை அதிகம் உச்சரிக்கும் அளவிற்கு என் வேலை இருந்தது என்பதை இங்கு சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

சங்கத்தின் செயலாளர் ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, “என்ன செயலாளர்... என்ன நடக்குது சங்கத்தில்’’ என்று கிண்டலாகக் கேட்பார்.

அவர் செயலாளர். என்னைச் செயலாளர் என்று அழைப்பார்.

அந்தளவுக்கு கே.ஆர்.ஜி. தலைவர் என்றால், அவர் சொன்ன வேலையை செயல் படுத்தும் வேலைக்காரனாக நான் இருந்திருக்கிறேன்.

இந்த விசுவாசம், கே.ஆர்.ஜி. அவர்களை எதிர்க்கும் சிலருக்குப் பிடிக்காமல் போனது. அதனால், என்னை சங்கத்தில் இருந்து வெளியேற்றினால், கே.ஆர்.ஜி.க்கு பாதி பலம் குறையும் என நினைத்தார்கள்.

இந்த நிலையில், தலைவரின் உத்தரவின் பேரில் அடுத்த தலைமைக்கு இப்ராஹிம் ராவுத்தரை நிற்க வைக்க, நான் நேரில் சென்று பேசி வந்த தகவல், அந்த குழுவுக்கு தெரிந்திருக்கிறது. அது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், பல தயாரிப்பாளர்களை நேரில் சென்று உறுப்பினராகச் சேர்த்தவன் என்பதால், வாக்கு சேகரிக்க நான் அவருக்கு உதவியாக இருந்துவிடுவேன் என்கிற அச்சமும் அவர்களிடத்தில் இருந்தது.

அதனால், என்னை சங்கத்தில் இருந்து அனுப்ப தீவிரம் காட்டினார்கள்.

இளைய தளபதி விஜய்யுடன் சாந்தா ராஜகோபால்
விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ படம் வெளியாகி, அடுத்து அர்ஜுன் நடித்த ’சுதந்திரம்’ பட தயாரிப்பு வேலைகளில் பிசியாக இருந்தார் தலைவர் கே.ஆர்.ஜி.

அவரது தயாரிப்பு அலுவலகத்திற்கு சென்று, “நீங்கள் இல்லாமல் சங்கத்தில் என்னால் வேலை செய்ய முடியாது” என்பதை அவரிடம் தெரிவித்தேன்.

“நான் இல்லை என்றாலும், எனக்கு பிறகு ராவுத்தர் தலைவராக இருப்பார். அவரை ஜெயிக்க வைப்போம். நீ உன் வேலையைப் பாரு” என்று அமைதிப் படுத்தினார் தலைவர் கே.ஆர்.ஜி..

அதை அப்போது ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் நான் இல்லாமல் இருந்தேன்.

வேலையில் இருந்து நானே விலகிக் கொள்கிறேன் என்றேன்.

இதைக் கேட்டு, தலைவர் கே.ஆர்.ஜி. அதிர்ந்து போனார்.

No comments:

Post a Comment