Saturday, April 27, 2019

24. பிரபுவை சந்தித்த கே.ஆர்.ஜி.


மறுநாள் காலை பனிரெண்டு மணிக்கு ஒய்ட் ஹவுஸ் அறைக்கு வந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன், தலைவர் கே.ஆர்.ஜி. அவர்களைச் சந்தித்து கதை சொன்னதாகவும், அவர் என்ன ஐடியாவில் இருக்கிறார் என்பதை நீ தெரிந்து வரவேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.

மேலும், பிரபு வேறு படத்திற்கு செல்ல இருப்பதாகவும், நாம் முதலில் முன்பணம் கொடுத்தால் நமக்கு முதலில் கால்ஷீட் கொடுப்பார் என்றும் தெரிவித்தார்.

அன்று மாலை கே.ஆர்.ஜியின் அலுவலகத்திற்கு சென்றேன்.

என்னை அவரது அறைக்கு அழைத்த கே.ஆர்.ஜி., கஜேந்திரன் வந்ததையும், கதை சொன்னதையும் அவராகவே தெரிவித்தார்.

இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை துவங்குங்கள் முதலாளி என்று அவரிடம் தெரிவித்த போது, அவரது மகன் கங்காதரன் பெங்களூரு சென்றிருப்பதால், அவர் வந்த பிறகு இது குறித்து பேசலாம் என்றார்.

பிரபு கால்ஷீட் விஷயமாக கஜேந்திரன் சொன்ன தகவலத் தெரிவித்த போது, அவரது சிறிய மீசையை வருடினார். சிறிய யோசனைக்கு பிறகு என்னைப் பார்த்தவர், பிறகு இருக்கையை விட்டு எழுந்தார்.

டிரைவர் ராஜமன்னார் ஓடிவந்து காரை எடுக்க, கே.ஆர்.ஜி. காரில் ஏறி அமர்ந்தார்.

சிவாஜி சார் நடிப்பில் ‘திருப்பம், ‘நேர்மை, ‘தாய்க்கு ஒரு தாலாட்டு, பிரபு சார் நடிப்பில் ‘கோவலன் அவன் காவலன் போன்ற படங்களைத் தயாரித்திருக்கிறார் கே.ஆர்.ஜி.

சிவாஜி சாருக்கு பிரெஞ்சு அரசு செவாலியே விருது வழங்கியதை முன்னிட்டு தமிழ்த் திரையுலகம் சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா எடுக்கக் காரணமாக இருந்தவர்களில் கே.ஆர்.ஜியும் முக்கியமனாவர். அதனால், அவரது கார் சிவாஜியின் அன்னை இல்லத்துக்குச் சென்று பிரபுவின் கால்ஷீட் தேதிகளுடன் திரும்பியது.

அலுவலகத்தில் ஒரு மாதம் கதை விவாதம் நடைபெற்றது. அதில் உதவி இயக்குநர்கள் ராஜகோபால், ஜவகர், சண்முகவேல், மீனாட்சி சுந்தரம், அமீர்ஷாஜ், பரமசிவம், சேகர் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். ஒவ்வொரு காட்சியும் நன்றாக வர எல்லோருடைய ஒத்துழைப்பும் மிக சிறப்பாக இருந்தது.

பிரபுவுக்கு ஜோடியாக ரம்பா நடிக்க வேண்டும் என்று விரும்பினார் கே.ஆர்.ஜியின் மகன் கங்காதரன். தொடர்ந்து இரண்டு படங்களில் ரம்பா நடித்து விட்டதால், ‘படையப்பா’ படத்தில் நன்றாக பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் நடித்தால், புதிதாக இருக்கும் என்று இயக்குநர் கஜேந்திரன் விரும்பினார்.

பிரபுவின் சகோதரியாக நடிக்க கோவை சரளா ஒப்பந்தம் ஆனார். கோவை சரளாவின் கணவராக நடிக்க வடிவேலுவை அணுகிய போது, கோவை சரளாவுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்கிற முடிவில் இருந்தார் வடிவேலு. அதனால், அந்தப் பாத்திரத்தில் நடிக்க மணிவண்ணனை ஒப்பந்தம் செய்தனர்.

நடிகர்கள் கால்ஷீட் பெறுவதும், படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதுமாக வேலைகள் தீவிரமானது.

படத்தில் பிரபுவின் வீடு முக்கியமானது. அடகு வைக்கப்பட்ட அந்த வீட்டை திருப்புவதுதான் கதாநாயகனின் லட்சியமாக இருக்கும். அதற்காகப் பல வீடுகளைத் தேடி அலைந்தார்கள்.

கே.ஆர்.ஜியின் அலுவலகம் ஒரு பழைய வீட்டில்தான் இருந்தது. அதனால், அலுவலகத்திற்கு பெயிண்ட் அடித்து, இந்த வீட்டையே காட்டிவிடலாம் என்று ஆலோசனை கூறினேன்.

பரங்கிமலை அருகே ஒரு வீடு பார்த்து இயக்குநரை அழைத்து சென்று காட்டினார் தயாரிப்பு நிர்வாக்கு சசி. வாடகை அதிகம் கேட்டதாலும், சில நிபந்தனைகளின் அடிப்படையில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று கூறியதாலும், அந்த வீடு வேண்டாம் என்றார் இயக்குநர் கஜேந்திரன்.

கடைசியில் நான் சொன்னபடி கே.ஆர்.ஜி. அலுவலகத்தின் வெளிப்பகுதியை தான் படத்தில் பிரபுவின் லட்சிய வீடாகக் காட்டினார்கள்.
அருணாசலம் ஸ்டுயோவில் உள்ள வீட்டின் முகப்பை மாற்றி, எதிரே பிளாட் வீடு இருப்பது போலவும், பிளாட்பாரம், கடைகள் இருப்பது போலவும் ஆர்ட் டைரக்டர் ஜி.கே. மாற்றிக் கொடுத்திருந்தார். அதற்கு இரண்டு லட்சம் செலவு ஆனது. அங்கு முதல் நாள் படப்பிடிப்பு துவங்கி, தொடர்ந்து ‘பட்ஜெட் பத்மநாபன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆனால், ஏ.எல்.அழகப்பன் ஆசைப்பட்ட ‘இராமநாராயணன் 100’ விழா நடைபெறவில்லை. அதே போல அவர் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் உதயா நடிக்க இருந்த படத்தையும் துவங்கவில்லை.

‘பட்ஜெட் பத்மநாபன்’ படத்தைத் தொடர்ந்து பிரபு நடித்த ‘மிடில்கிளாஸ் மாதவன்’ படத்தையும் டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில் தயாரித்தார் கே.ஆர்.ஜி.  பிரபு ஜோடியாக அபிராமி நடிக்க, விவேக், வடிவேலு, டெல்லி கணேஷ் உட்பட பலர் நடித்த அந்தப் படத்தில் இசை அமைப்பாளராக தினா அறிமுகமானார். .

No comments:

Post a Comment