Saturday, April 27, 2019

13. தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்




கே.ஆர்.ஜி.
பெரும் விலை கொடுத்து வாங்கும் படங்கள் தோல்வி அடையும் போது பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதனால், திரைப் படங்களை வாங்கும் போது, நடிகருக்கு தகுந்தார் போல ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு விலை நிர்ணயம் செய்து, அந்த தொகைக்கு மேல் வாங்கினால் விநியோகஸ்தர் சங்கங்கள் ஒத்துழைப்பு தராது என்று முடிவெடுத்து விநியோகஸ்தர்களுக்கு விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவுறுத்தியிருந்தது.
ஏற்கெனவே நடிகர்கள் சம்பளம் பெரிதாகப் பேசப்பட்டுப் படப்பிடிப்பில் இருக்கும் படங்களுக்கு விநியோகஸ்தர் சங்கம் எடுத்திருக்கும் அந்த முடிவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் க் கூட்டி விவாதித்து விநியோகஸ்தர் சங்கங்களுடன் கலந்து பேச வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் தலைவர் கே.ஆர்.ஜி.யிடம் வந்து முறையிட்டனர்.
அதனால், செயற்குகுழுக் கூட்டத்தை அன்று மாலையே கூட்டிட ஏற்பாடு செய்யச் சொன்னார் கே.ஆர்.ஜி. கூடவே, ஆலோசனைக் குழு, சிறப்பு அழைப்பாளர்கள் என அனைவரையும் அழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவசர செயற்குழுக் கூட்டம் என்பதால், தொலைபேசி மூலம் செயற்குழு உறுப்பினர்களுக்கு நான் தகவல் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஆனந்த் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் கோவை முருகேசன், ஒரு புகார்க் கடிதத்துடன் வந்தார். அந்தக் கடிதத்தில், பாலு மகேந்திரா இயக்கத்தில் ‘ராமன் அப்துல்லா’ என்கிற படத்தை தயாரித்து வருவதாகவும், படப்பிடிப்பில், இயக்குநர் பாலுமகேந்திராவுக்கும் தொழிலாளர் அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால், நான்கு நாட்களாக படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும், படப்பிடிப்புக்குத் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தராததால், படப்பிடிப்பைத் தொடரமுடியவில்லை என்றும் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசி படப்பிடிப்புக்கு உதவுமாறு அந்த கடிதத்தில் கூறி இருந்தார்.
இயக்குநர் பாலு மகேந்திரா
கடிதத்தைத் தலைவர் கே.ஆர்.ஜியிடம் படித்துக் காட்டினேன். தயாரிப்பாளர் கோவை முருகேசனை அழைத்து முழுமையான காரணம் என்ன என்று அவரிடம் கேட்டார்.
“துணை நடிகர்களைக் காட்சிகளில் பயன்படுத்தும் போது, சங்க உறுப்பினர் அல்லாத சிலரையும் இயக்குநர் பாலு மகேந்திரா பயன்படுத்தினார். இதனால், தொழிலாளர் அமைப்பில் இருந்து நேரில் வந்து விசாரித்தார்கள்.
இருவருக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால், தொழிலாளர் அமைப்பின் தலைவரே, தொழிலாளர்களைப் பார்த்து ‘பேக்கப்’ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை.
ஒளிப்பதிவாளர் சங்கத்திற்குச் சென்று அந்தத் தகவலைப் பாலு மகேந்திரா தெரிவித்தார். அதற்கு, தொழிலாளர் அமைப்பின் தலைவரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று கூறி உள்ளனர்.  
“எனது படப்பிடிப்பை நிறுத்திய தொழிலாளர் சம்மேளனத் தலைவரிடம் நான் எப்படி பேச முடியும் என்று பாலுமகேந்திரா செல்லவில்லை. இதனால் நான்கு நாட்களாகப் படப்பிடிப்பு எனக்கு நடைபெறவில்லை” என்று தயாரிப்பாளர் கோவை முருகேசன் தெரிவித்தார்.
சிறிது நேர அமைதிக்குப் பிறகு என்னை அழைத்த கே.ஆர்.ஜி., “இந்தக் பிரச்சினையையும் செயற்குழுக் கூட்டத்தில் வைத்துப் பேசலாம். கடிதத்தைப்  பெற்றுக் கொண்டு கையெழுத்துப் போட்டுக் கொடு” என்று கூறினார்.
கே.ஆர்.ஜி. மதிய உணவுக்குச் சென்ற பிறகு, மீண்டும் செயற்குழுக் கூட்ட அழைப்பு வேலைகளில் மூழ்கினேன்.
அன்று மாலை பிலிம் சேம்பர் கட்டடத்தில் இருந்த கூட்ட அரங்கில் செயற்குழு கூட்டம் கூடியது. அழைக்கப்பட்டவர்களில் தொண்ணூறு சதவீத உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் விநியோகஸ்தர் சங்கத்தின் முடிவுகள் குறித்த விவாதம் நடந்தது. இப்போது எடுத்து வரும் படங்களுக்கு ஏற்கெனவே சம்பளம் பேசப்பட்டுவிட்டது. அதனால், திடீர் என விநியோகஸ்தர் சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துப் போக முடியாது. வியாபாரத்தில் சுதந்திரம் வேண்டும் என்று காரசாரமாகப் பேசினார்கள்.
இயக்குநர் பாரதிராஜா
இனிமேல் எடுக்கும் படங்களுக்குச் சம்பளம் பேசும் போது விநியோகஸ்தர்களின் முடிவை மனதில் வைத்துப் பேச வேண்டும். இது குறித்து நடிகர் சங்கத்துடன் கலந்து பேச வேண்டும். அதன் பிறகு விநியோகஸ்தர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் அடங்கிய ஒரு கூட்டுக் கூட்டத்தை ஏற்படுத்தி, அதில் விவாதிக்க வேண்டும். அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர்.
அதன் பிறகு தயாரிப்பாளர் கோவை முருகேசன் அவர்கள் கொடுத்த கடிதம் குறித்து விவாதிக்கப்பட்டது.
படம் விற்க ஒரு பக்கம் நாம் கஷ்டப் படுகிறோம். இன்னொரு பக்கம் படப்பிடிப்புக்கே வர மறுக்கிறார்கள். நம்ம வேதனையை யாரிடம் சென்று முறையிடுவது என்று வருத்தப்பட்டு பேசினார், தயாரிப்பாளர், எஸ்.எஸ்.துரைராஜ்.
இதனால் கூட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. தொழிலாளர்கள் அமைப்பின் சார்பில் கஷ்டத்தை அனுபவித்ததாக சில தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நேர்ந்த வேதனைகளைப் பகிர்ந்து கொண்டனர். விவாதம் நீண்ட நேரம் நடைபெற்றது.
ஒரு கட்டத்தில் இந்தப் பிரச்சினையை அனைத்து தொழிலாளர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். அதனால் ‘ஸ்டிரைக்’ பண்ண வேண்டும் என்று சிலர் பேசினர்.
“தொழிலாளர் அமைப்புதான் ஸ்டிரைக் போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள், அது அவர்களுக்கு பிரச்சினையாக இருக்காது. நாம் ஸ்டிரைக் செய்தால், நம் உறுப்பினர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அதனால், ஆபத்தான காரியங்களில் ஈடுபடக் கூடாது” என்றார் கே.ஆர்.ஜி.
அவரது பேச்சை மீறி கூச்சலும், குழப்பமுமாக விவாதம் நடந்தது.
நமது கஷ்டத்தையும் வலியையும் எப்படித் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் உணர்த்துவது. அதனால் வேலை நிறுத்தம் அவசியம் என்று பலரும் வாதிட்டனர்.
எதிர் வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார் பாரதிராஜா. அவரிடம், ‘’நீ என்ன சொல்றே பாரதி’’ என்றார் கே.ஆர்.ஜி.
“தொழிலாளர்கள் படைப்பு சுதந்திரத்தில் தலையிடுவதை என்னால் ஏற்க முடியவில்லை. இந்த காட்சியில் இன்னார்தான் நடிக்க வேண்டும் என்பதை இயக்குநர்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு உதவியாகத்தான் தொழிலாளர்கள் இருக்க வேண்டும். இவர்களை வைத்துதான் படம் எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் அமைப்பு சொல்வதை என்னால் ஏற்க முடியாது.
என் படத்தில் கூட இப்படிப்பட்ட பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறேன். அப்போது யாரும் உதவியாக இப்படி பேசியதில்லை. அதே சமயம், தொழிலாளர்கள் அமைப்பு பலம் உள்ள அமைப்பாக இருக்கிறது. அவர்களைக் கண்டித்து, எதிர்த்து உணர்ச்சிவசப்பட்டு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் என்று முடிவு செய்தால், அதன் பிறகு ஏற்படும் பிரச்சினைகளையும் நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். அதனால், அதற்குத்  தயாராக இருந்தால், இந்தப் போராட்டம் பற்றி முடிவு செய்யுங்கள்” என்றார் பாரதிராஜா.
ராமன் அப்துல்லா - விக்னேஷ், ஈஸ்வரிராவ் 
வேலை நிறுத்தம் அவசியம் என்று பெஞ்சில் பலமாக அடித்து சிலர் வாதிட்டார்கள் ஸ்டிரைக் செய்தால்தான் நம் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றார்கள்.
பெரும்பான்மை உறுப்பினர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு ஆதரவுதெரிவித்து கோஷம் எழுப்பினர். அதனால் வேலை நிறுத்தம் என்கிற முடிவுக்கு தள்ளப்பட்டது தலைமை.
ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி அந்த நாளில் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கலாம் என்று தெரிவித்தார் கே.ஆர்.ஜி. அதற்கு உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஒரு தேதியை அறிவித்து வேலை நிறுத்தம் என்று சொன்னால், அது விடுமுறை என்பது போல ஆகிவிடும். காலையில் வேலைக்கு வந்து அவர்கள் நிற்கும் போது படப்பிடிப்பு இல்லை என்று தெரிந்தால்தான் அது வேலை நிறுத்தம் ஆகும் என்று வாதிட்டார்கள்.
கே.ஆர்.ஜிக்கு அதில் உடன்பாடில்லை. அரசுக்குத் தெரிவிக்காமல், அறிவிப்பு தராமல் வேலை நிறுத்தம் செய்ய அவர் விரும்பவில்லை. ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டார். நாளை வேலை நிறுத்தம் என்கிற முடிவு தீர்மானமாக நிறைவேறியது.
பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு உடனே என்னை ஏற்பாடு செய்யச் சொன்னார்.
மறுநாள் படப்பிடிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு தகவல் சொல்லி படப்பிடிப்பை நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
விநியோகஸ்தர் சங்க முடிவு பற்றி விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டம் திசைமாறி தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவிக்கும் கூட்டமாக மாறியது.
ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம், ஆறு மாதம் வரை நீடிக்கும் என்பது அப்போது யாரும் அறியவில்லை.

No comments:

Post a Comment