Saturday, April 27, 2019

20. தலைவர் பதவிக்கு இப்ராஹிம் ராவுத்தர்


விஜயகாந்துடன் இப்ராஹிம் ராவுத்தர் 
‘புலன் விசாரணை, ‘கேப்டன் பிரபாகரன், ‘என் ஆசை மச்சான் என ஏராளமான படங்களைத் தயாரித்தவர், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர்.

விஜயகாந்தின் நண்பர். விஜயகாந்தின் வெற்றிக்காகப் பல ஆண்டுகள் அவரோடு இணைந்து பயணித்தவர். கஷ்ட நஷ்ட காலங்களில் அவரோடு இருந்தவர். நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் திரு.கே.ஆர்.ஜி அவர்கள் தலைவராக இருந்த போது, அச்சங்கத்தின் கௌரவ ஆலோசகராக இருந்தார் இப்ராஹிம் ராவுத்தர்.

ராவுத்தர் பிலிம்ஸ், சேரநாடு மூவி கிரியேஷன்ஸ், ஆண்டாள் அழகர் என பட நிறுவனங்களை உருவாக்கி பல படங்களைத் தயாரித்தவர்.

தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் ஒரு பதவியை ஒருவர் வகிக்க கூடாது என்கிற சூழல் எழுந்த போது, சுயநலமின்றி தயாரிப்பாளர்களுக்கு சேவை செய்ய எந்தத் தயாரிப்பாளர் சரியாக இருப்பார் என்று தலைவர் திரு.கே.ஆர்.ஜி. அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

தயாரிப்பாளர் சங்கத்தை பலமாக உருவாக்கிய அவர், அதற்குச் சரியான தலைமையைக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்கிற கவலையில் இருந்தார். பலரை எழுதிப் பார்த்து, கடைசியில் இப்ராஹிம் ராவுத்தரை முடிவு செய்திருக்கிறார்.

வெளியில் சென்றிருந்த நான் அப்போதுதான் அலுவலகத்தில் நூழைந்தேன். ’’பாலா இங்கே வா’’ என்று அழைத்த திரு. கே.ஆர்.ஜி. அவர்கள், தேர்தல் பற்றியும் அடுத்த தலைவர் குறித்தும் ஆலோசனை கேட்டார்.

கே. ஆர். ஜியுடன் பாலன் 
தலைவர் பதவிக்கு ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் குறித்தும், சரியான தலைவராக யார் இருப்பார் என்பது குறித்தும் அவரிடம் தெரிவித்தேன்.
’’ராவுத்தர் எப்படிடா’’...? என்று என்னிடம் கேட்டார்.

நான் ராவுத்தரைப் பட்டியலில் சொல்லவில்லை. அவர் தலைவர் பொறுப்புக்கு வர விரும்பமாட்டார் என்பதால் சொல்லவில்லை. ஆனால், தலைவர் முடிவு சரியாக இருக்கும் என்று எனக்குள் எண்ணம் பிறந்தது.

“உங்கள் யோசனை சரியாக இருக்கும் முதலாளி” என்று பதில் கூறினேன்.
“நாம் முடிவு செய்தால் மட்டும் போதாது. அவர் இந்தப் பதவியை ஒப்புக் கொள்ள வேண்டும். கடைசியில் மறுத்துவிட்டால் அந்த சமயத்தில் வேறு ஒருவரைத் திடீர் என முடிவு செய்ய முடியாது. அதனால், அவரிடம் சென்று இது பற்றிக் கேட்டு வா“ என்று என்னிடம் தெரிவித்தார்.

நான் ராவுத்தரின் உதவியாளர் குமார் அவர்களைத் தொடர்பு கொண்டு ‘’ராவுத்தர் சார் எங்கே இருக்கிறார்?’’ என்று விசாரித்தேன்.

’’வீட்டில் இருந்து கிளம்புகிறார். நூறடி ரோடு அலுவலகம் செல்கிறார்’’ என்று தெரிவித்தார் குமார்.

நான் ராவுத்தர் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு சென்றேன்.

“வா... பாலா’’ என்று எழுந்து நின்று வரவேற்றார். அப்படி எழுந்து நின்று வரவேற்பது அவரது பண்பாடு.

அவரிடம் கே.ஆர்.ஜி. அவர்களின் எண்ண ஓட்டங்களைச் சொன்னேன்.

விஜயகாந்துடன் இப்ராஹிம் ராவுத்தர் 
தலைமைப் பதவி என்பது ரொம்ப முக்கியமான பொறுப்பு. கொஞ்சம் அசைந்தால் கூட தலையில் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். அனைவரையும் அனுசரித்து அன்புகாட்டி அடக்கி வைக்கும் குணம் உள்ளவர்கள்தான் அந்தப் பதவியை வகிக்க முடியும். அது என்னால் முடியாது பாலா, என்று சொன்னவர், பிறகு, ’’அறக்கட்டளையில் என்னதான் பிரச்சினை’’ என்கிற கேள்வியை எழுப்பினார்.

அறக்கட்டளை உருவானது. அதற்குத் திரு.கே.ஆர்.ஜி. திரு.கேயார், திரு.டி.ஆர்.ராமண்ணா ஆகியோர் அறங்காவலராக இருந்தது, பிறகு டி.ஆர்.ராமண்ணா மறைவுக்கு பிறகு, திரு.கே.பாலசந்தர் அவர்களைச்  செயற்குழுவில் தேர்வு செய்தது, நமக்கு இந்த பதவி கிடைக்கும் என்று ஆசைப்பட்டவர்கள் ஏமாந்து, குழு மனப்பான்மையோடு செயல்படுவது என அன்றைய உண்மை நிலவரத்தை அவரிடம் கூறினேன்.

எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட ராவுத்தர், பிறகு சிந்தித்தார்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு, “’’தலைவரிடம் சென்று நான் சம்மதித்துவிட்டேன் என்று சொல் என்கிற பதிலைத் தந்தார்.


No comments:

Post a Comment